தூத்துக்குடி முள்ளக்காடு ராஜுவ்நகர் 7ஆவது தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் சரண்டேவிட் (வயது 25), உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் மெயின் ரோட்டில், ஸ்பிக் வளாகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரண்டேவிட், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.