தமிழக செய்திகள்

தூத்துக்குடி: பைக் விபத்தில் வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்

தூத்துக்குடியில் நண்பர்கள் 3 பேர் ஒரே பைக்கில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா நளராஜபுரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காட்டேரி பெருமாள் மகன் முத்துப்பாண்டி (வயது 21). இவர் தனது நண்பர்களான சிவகணேஷ்(19) மற்றும் இசக்கிராஜா(20) ஆகியோருடன் ஒரே பைக்கில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆழ்வார்திருநகரி அரசாங்க நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. இதில் சாலையோரம் இருந்த குத்துக்கல் மீது மோதி அருகில் இருந்த கால்வாய்க்குள் பைக் பாய்ந்தது.

இந்த கோர விபத்தில் முத்துப்பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த சிவகணேஷ் மற்றும் இசக்கிராஜாவிற்கு படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி போலீசார், காயமடைந்த 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த முத்துப்பாண்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குலசை கோவிலுக்கு சென்று திரும்பியபோது வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.