விருதுநகர்,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 96 தொகுதிகளில் வெற்றி, 11 தொகுதிகளில் முன்னிலை என மொத்தம் 107 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் 56,071 வாக்குகளைப் பெற்று, 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். அந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கடற்கரைராஜ் 62,060 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பிறகு, நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “மக்கள் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றாக வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வெற்றி பெற்றவர்கள் கடந்த ஆட்சியைப் போல் இல்லாமல் ஒரு நல்லாட்சியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.