சென்னை,
எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று முதன்முதலாக கேரளாவில் வந்தபோதே, அ.தி.மு.க. அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது. நோய்த் தொற்று சம்பந்தமாக நாள்தோறும் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளியிடப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகள் தினமும் ஊடகங்களுக்கு நேரடியாக புள்ளிவிவரங்களை கூறி வருகின்றார்.
இது பொது மக்களிடையே விழிப்புணர்வையும், அரசின் மீதான நம்பகத்தன்மையையும் அதிகரித்துள்ளது. அதே போல, வேறு எந்த மாநிலங்களும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆரம்பிக்கும் முன்னரே, தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்தது, சர்வதேச பயணிகளை விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தி கண்காணிப்பில் வைத்தது. அதன் தொடர்ச்சியாக மாநில எல்லைகள் மூடப்பட்டது.
15.3.2020 முதல் பொது இடங்களில் கூடத்தடை உத்தரவு, பூந்தமல்லி, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் வசதிகள் என பல்வேறு நடவடிக்கைகளை மிகச் சரியான நேரத்தில் அரசு எடுத்து வந்ததை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பாராட்டியுள்ளார். சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இந்நோய்த்தொற்று உள்ளது என்று அறிந்தவுடனேயே, ஜனவரி மாதத்திலேயே இந்நோயினைக் கண்டறியும் பரிசோதனைக்கருவிகள், முழு உடல் கவச உடைகள், மருந்துகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஆணை வழங்கிய தீர்க்கதரிசியான அரசு இது.
இதுவரை தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 969 ஆகும். நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பொருட்டு, வீடு வீடாக கண்காணிப்பு நடத்துவதற்கான விரிவான உள்ளூர் கட்டுப்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, இதுவரை 16 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளில் உள்ள சுமார் 59 லட்சம் மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 32 ஆயிரத்து 371 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளும், 3,371 வெண்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைத்துள்ளதுடன், தற்சமயம் 20 சோதனை மையங்களையும் குறுகிய காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், எதிர்கால திட்டமிடலுக்காக, ஒரு லட்சம் படுக்கை வசதிகள் கொண்ட 5,713 தனிமைப்படுத்தும் கட்டிடங்கள், அரசு மற்றும் தனியார் துறை கட்டிடங்களில் கண்டறியப்பட்டு உள்ளன.
போதுமான அளவிற்கு மூன்றடுக்கு முக கவசங்கள், என்-95 முக கவசங்கள் மற்றும் கவச உடைகளும் இருப்பில் உள்ளன. இது போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு நில்லாமல், மருத்துவர்களின் தேவையினை கருத்தில் கொண்டு, புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,558 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
அது மட்டுமல்லாமல், களப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கான முழு மருத்துவச் செலவினையும் அரசே ஏற்பதுடன், 2 லட்சம் ரூபாய் அவர்களுக்கு வழங்கும். துரதிருஷ்ட வசமாக அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் நேர்வுகளில், ரூ.10 லட்சம் முதல் -அமைச்சரின் பொது நிவாரண நிதியின் மூலம் நிவாரணம் வழங்கவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
ஊரடங்கினால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை களையும் வகையில், இந்தியாவிலேயே முதன்முதலாக, ஊரடங்கு அமலுக்கு வரும் முன்னரே, கொரோனா சிறப்பு நிவாரணத் தொகுப்பினை 3,280 கோடி ரூபாய் செலவில் அறிவித்து, அதனை உரிய நேரத்தில் அளித்து, பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும், உணவுப்பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம்.
சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப் படுகிறது.
தமிழகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கிய பிரச்சினையான கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி பயன்படுத்துவதை வரவேற்காமல், அதற்கு கண்டனம் தெரிவிப்பது இவர்களின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. தமிழ்நாடு அரசுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக 510 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, 48 கோடியே 24 லட்சம் ரூபாயினை தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு வழங்கியுள்ளது.
மேலும், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 312 கோடியே 64 லட்சம் ரூபாயினை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நமது திறமை வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் முயற்சியால், தமிழ்நாட்டில் இறப்பு விகிதமும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பிரதமருடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறை செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அரசு எதுவும் செய்யவில்லை என்பதை போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், இந்த அரசின் மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் இத்தருணத்தில் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது; இது அவரது சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது.
நோய்த் தொற்றினை கண்டறிதல், அவர்களை தனிமைப்படுத்துதல், பரிசோதனைக்கு உட்படுத்துதல், நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல், நோய்த் தொற்று பரவாதிருக்க ஊரடங்கு உத்தரவு, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து உறுதி செய்ய சிறப்பு நிவாரணம், ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு பாதுகாப்பு, வேளாண் பெருமக்களுக்கு கட்டண சலுகைகள் என பன்முக நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
நிலைமை இவ்வாறிருக்கும் போது, எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல்
பாராது, தன்னலமற்று பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சிஅமைப்பினர், தூய்மைப்பணியாளர்கள் போன்ற பணியாளர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.