தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது இந்திராநகர் பெருமாள் கோவில் அருகே இளைஞர்கள் கும்பலாக நின்றிருந்தனர்.
அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செண்பகராஜ் மகன் மருதுபாண்டியன் (வயது 29) என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக பட்டா கத்தியால் கேக் வெட்டியதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டதாகவும் தெரியவந்தது. நடராஜபுரம் 1-வது தெரு காளிராஜ் மகன் ராமர்(19) அரிவாளை ஏந்தியவாறு இருந்தாராம். அவதூறாகப் பேசியவாறு, தப்பியோட முயன்ற அந்தக் கும்பலை போலீசார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
தொடர்ந்து மருதுபாண்டியன், ராமர், இந்திராநகர் பெருமாள் கோவில் தெரு சங்கிலிபாண்டி மகன் பொன்பாண்டி(25), அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ்குமார்(19), இந்திராநகர் துரைப்பாண்டி மகன் ராஜேஷ்குமார்(26), சீனிவாசநகர் பாலமுருகன் மகன் கார்த்திகேயன்(24), அத்தைகொண்டானைச் சேர்ந்த சேகர் மகன் கவிபாரதி(19) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.