ஆத்தூர்.
ஆத்தூரில் அடுத்தடுத்து வந்த காதல் ஜோடிகளால் மகளிர் போலீஸ் நிலையம் களைக்கட்டியது. அனல்பறந்த சமரச பேச்சுவார்த்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 24). பட்டதாரியான இவர் கார் டிரைவர். அரவிந்தும் அதே பகுதியை சேர்ந்த வசித்ரா (22) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் கடந்த மாதம் 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னை பெரியமேடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தி அரவிந்துடன் வசித்ராவை அனுப்பி வைத்தனர்.
இதேபோல் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி உலிபுரம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திப ராஜ் (26). டிரைவரான இவருக்கும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த தனுசுதா (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த 13-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்று உலிபுரம் சிவன் கோவிலில் திருமணம் செய்தனர். இந்தநிலையில் பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து தனுசுதாவை பார்த்திபராஜ் உடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் 10 ஏக்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (22). இவர் அதேபகுதியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வருகிறார். இவர் தனது காதலனான வாழப்பாடி துக்கிஅம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் 29-ந் தேதி திருமணம் செய்தார். இதையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் இருவரின் பெற்றோரும் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் சதீஷ்குமாருடன் தமிழ்மணியை அனுப்பி வைக்கப்பட்டார். ஒரே நாளில் அடுத்தடுத்து வந்த காதல் ஜோடிகளாலும், அனல்பறந்த பேச்சுவார்த்தைகளாலும் மகளிர் போலீஸ் நிலையம் களைக்கட்டியது.