மதுரை,
மதுரையில் போலீஸ் நிலையம் அருகே ஓட, ஓட விரட்டி ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்ற சப்பாணி சரவணன் (வயது 50). பிரபல ரவுடியான இவர் மீது மதுரை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற சரவணன், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். சோலையழகுபுரம் பிரதான சாலையில் உள்ள டீக்கடைக்கு சரவணன் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையிலும் அவர் டீக்கடைக்கு சென்று இருந்தார். அவர் டீ குடித்தபோது மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென சரவணனிடம் தகராறில் ஈடுபட்டு, தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.
உடனே உயிரை காப்பாற்றிக்கொள்ள சரவணன் அங்கிருந்து ஓட முயன்றார். இருப்பினும், அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டிச்சென்று மேலும் சரமாரி யாக வெட்டினர். நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் சரவணன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்ட இடத்தின் அரு கில்தான் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையம் உள்ளது. கொலையாளிகள் அங்கிருந்து வேகவேகமாக தப்பிச்சென்றனர்.
ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த படுகொலை, அப் பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சரவணன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரமாக விசாரித்து வருகிறோம். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடிவருகிறோம் என்றனர்.
நேற்று மதுரை மாநகரில் சரவணன் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். புறநகரான மேலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மெக்கானிக் செல்லதுரை என்பவரும், ஒத்தக்கடை அருகே அன்னமயில் என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டனர். ஒரேநாளில் மதுரை மாவட்டத்தில் 3 கொலைகள் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.