தமிழக செய்திகள்

மசினகுடி-ஊட்டி சாலையை கடந்து சென்ற புலி: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுவதால் மான்கள் உள்ளிட்ட தாவர உண்ணி விலங்குகள் நீர்நிலைகளின் கரையோரம் உள்ள பசுமையை தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.

இதேபோல் ஊன் உண்ணிகளான புலிகள், சிறுத்தை, செந்நாய்கள் உள் ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மான்கள் உள்ளிட்ட இரைகளைத்தேடி புலிகள் அதிக அளவில் இடம்பெ யர்ந்து வருகின்றன.இதன் காரணமாக மசினகுடி பகுதியில் உள்ள சாலைகளை புலிகள் அடிக்கடி கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று காலை மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் வாழைத் தோட்டம் பகுதியில் புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக ஊட்டிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் புலியை அச்சத்துடன் கண்டு ரசித்தனர். பின்னர் கம்பீர நடையுடன் புலி சாலையைக் கடந்து வனத்துக்குள் சென்றது. சாலையை கடந்து சென்ற புலியை வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். தற்போது அந்த காட்சி வைரலாகி வருகிறது.

இதேபோல் மாயாறு உள்ளிட்ட சாலைகளிலும் புலி நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுக்கக்கூடாது என்றும், கவனமாக செல்ல வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.