திருநெல்வேலி,
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட 2 இளம்பெண்களை நெல்லை சந்திப்புப் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக வருமானம் ஈட்டலாம் என கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி வருமானம் தராமலும், முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டது திருநெல்வேலி அருகே உள்ள காரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி (வயது 23) மற்றும் பூரணசெல்வி(30) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 2 இளம்பெண்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.