தமிழக செய்திகள்

திருநெல்வேலி: பெண்ணை தாக்கி 29 சவரன் நகை கொள்ளை- 4 பேர் கைது

முன்னீர்பள்ளம் பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியில், அடையாளம் தெரியாத 4 பேர் வீட்டில் இருந்த பெண் ஒருவரை தாக்கி, வீட்டிலிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 18.4.2026 அன்று, ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், அடையாளம் தெரியாத 4 நபர்கள் வீட்டில் இருந்த பெண்மணி ஒருவரை தாக்கி, வீட்டிலிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்சொன்ன வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய தீவிர நடவடிக்கைகள், சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில், முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, மேற்சொன்ன குற்றச்செயலில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (வயது 26), வீரசங்கிலி(20), இசக்கிமுத்து(21) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 29 சரவன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

இந்த குற்ற சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட, சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. மற்றும் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.