சென்னை,
இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13-ம் தேதி சென்னையில் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.
ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது ஏழுமலையான் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.
நடப்பாண்டு இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13-ம் தேதி, சென்னை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மதியம் 12:30 மணிக்கு பைராகி மடத்தை அடைகிறது. பின் மாலை 4 மணிக்கு திருக்குடைகள் வால்டாக்ஸ் சாலை வழியாக கவுனி தாண்டுகின்றன. பின் சூளை நெடுஞ்சாலை, ஓட்டேரி மேம்பாலம் வழியாக அயனாவரம் காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்கிறது.
மறுநாள் அதாவது செப்டம்பர் 14-ம் தேதி காலை 6 மணிக்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கி, பெரம்பூர், திரு.வி.க.நகர் வழியாக வில்லிவாக்கம் சென்று, சவுமிய தாமோதர பெருமாள் கோவில் அடைகிறது. செப்டம்பர் 15-ம் தேதி பாடி, முகப்பேர், அம்பத்துார் வழியாக இரவு திருமுல்லைவாயல் செல்கிறது. செப்டம்பர் 16-ம் தேதி ஆவடி இந்து கல்லுாரி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் செல்கிறது.
செப்டம்பர் 17-ம் தேதி திருப்பாச்சூர், கனகம்மாள்சத்திரம் வழியாக, கீழ்த்திருப்பதி எஸ்.எம்.எஸ்.ஓ., சபா கல்யாண மண்டபம் செல்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பதி அடைந்து, மாலை 3 மணிக்கு பெருமாளுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த திருக்குடை ஊர்வலத்தில் பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையான் அருள் பெற இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.