திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவன அதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை ராகவேந்திராநகரை சேர்ந்த மணிவண்ணன் (வயது 52), நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா. இந்த நிலையில் நேற்று காலையில் கவிதா வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்கள் பீரோவை திறந்து 50 சவரன் நகைகளை நூதன முறையில் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.