திருப்பத்தூர் மாவட்டம் நாட்ரம்பள்ளியை சேர்ந்தவர் சேகர். இவரது தாயார் சமீபத்தில் இயற்கை மரணம் அடைந்தார். இதனிடையே, அரசு திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு பணத்தை பெறுவதற்காக நாட்ரம்பள்ளி வட்டாட்சியர் (தாலுகா) அலுவலகத்தில் சேகர் விண்ணப்பித்தார்.
இதனிடையே, ஈமச்சடங்கு நிதி வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தரும்படி சேகரிடம் நாட்ரம்பள்ளி தனி வட்டாட்சியர் (தாசில்தார்) வள்ளியம்மாள் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சேகர் புகார் அளித்தார்.
இந்நிலையில், நாட்ரம்பள்ளி தனி வட்டாட்சியர் வள்ளியம்மாள் இன்று தனது அலுவலகத்தில் வைத்து ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வள்ளியம்மாளை கையும் கழவுமாக பிடித்தனர். பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வட்டாட்சியர் வள்ளியம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.