தமிழக செய்திகள்

திருப்பூர்: சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்திநகர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மனைவி மயங்காத்தாள் (75). இவர், நேற்று மாலை அப்பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென மயங்காத்தாள் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டுள்ளார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமிகள் 6 பவுன் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.