வெள்ளகோவில்,
அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு ஊழியர் சாலை விபத்தில் பலி இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
வெள்ளகோவில் கே.பி.சி. நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 58). இவர், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருக்கை கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். தினமும் இவர், தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளகோவிலில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வந்துவிட்டு, மாலையில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
கோபாலகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் பச்சாபாளையம் பிரிவு சிக்னல் அருகே வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது டூவீலர் மீது பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் தார் சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமும், உடலில் கடுமையான ரத்தப்போக்கும் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநர், அவருக்கு உதவ முற்படாமல் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகத்தில் தப்பியோடிவிட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் காவல் துறையினர் விபத்தில் இறந்த கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வெள்ளகோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
மேலும் தப்பியோடிய வாகனத்தை கண்டுபிடிக்க, பச்சாபாளையம் பிரிவு சிக்னல் மற்றும் அந்த நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.