தமிழக செய்திகள்

திருப்பூர் மார்க்கெட்டில் மீன் விலை சரிவு: அசைவ பிரியர்கள் குவிந்தனர்

கடல் மீன்கள் 30 முதல் 35 டன்களும், ஜிலேபி, கட்லா, ரோகு போன்ற அணை மீன்கள் 45 டன்களும் என மொத்தம் சுமார் 80 டன் வரை மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தன.

திருப்பூர்,

திருப்பூர் மீன் மார்க்கெட்டில் விலை சரிவினால் அசைவ பிரியர்கள் குவிந்தனர். திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் தினமும் டன் கணக்கில் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இங்கிருந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான மீன்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிச் செல்கின்றனர்.

விலை சரிவு

தற்போது ஆடி மாதம் என்பதால், பெரும்பாலான பொதுமக்கள் ஆன்மீக வழிபாட்டிற்காக மாலை அணிந்து, மாமிசம் தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். இதனால் பொதுவாக அசைவ மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைவாகவே காணப்படும். ஆனால், நேற்று, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்களை போட்டிப்போட்டு வாங்க ஆர்வம் காட்டினர். மீன்களின் வரத்து அதிகரித்ததால், அதன் விலை கணிசமாகக் குறைந்து இருந்ததே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

80 டன் வரத்து

நேற்று மார்க்கெட்டிற்கு மீன் வரத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக, வஞ்சிரம், மத்தி, நெத்திலி உள்ளிட்ட கடல் மீன்கள் 30 முதல் 35 டன்களும், ஜிலேபி, கட்லா, ரோகு போன்ற அணை மீன்கள் 45 டன்களும் என மொத்தம் சுமார் 80 டன் வரை மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடி மாதமாக இருந்தாலும் விலை மலிவாக கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.