தமிழக செய்திகள்

திருப்பூர்: விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்த வேட்பாளர்; பெண்கள் 7 பேர் மயக்கம்

தர்மபுரியில் விஜய் பிரசாரம் இன்று ரத்து செய்யப்படுகிறது என திடீரென த.வெ.க. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று மாலை திருப்பூரில் பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் கோவைக்கு வந்த விஜய், பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவினாசி சென்றார்.

அதன்பிறகு பிற்பகல் 3 மணியளவில் ஆட்டையாம்பாளையம் பிரிவில் இருந்து பிரசார வாகனத்தில் சென்று அவினாசி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோடு ஷோ சென்று வேனில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமாநல்லூர் நால்ரோடு சென்று அங்கு பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பூலுவப்பட்டி வரை ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற் கொள்கிறார். இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் வருகைக்காக பெருமாநல்லூரில் காத்திருந்த த.வெ.க. வேட்பாளருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து குடிநீர், ஓ.ஆர்.எஸ். வழங்கினர். அவர் தவிர, 7 பெண்கள் உள்பட 9 பேர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

இதற்கிடையே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் தர்மபுரியில் இன்று விஜய் பிரசாரம் ரத்து செய்யப்படுகிறது என திடீரென த.வெ.க. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.