தமிழக செய்திகள்

திருவள்ளூர்: மோட்டார் சைக்கிள் மீது பால் வண்டி மோதி விபத்து - 2 வாலிபர்கள் உயிரிழப்பு...!

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பால் வண்டி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்து உள்ளனர்.

திருவள்ளூர்,

சென்னை கொளத்தூர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 28), தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் கொளத்தூர் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் சதீஷ் (26) ஆட்டோ ஓட்டுனர். இருவரும் இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் கொளத்தூரில் இருந்து திருத்தணி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

அப்போது ஆவடி - திருவள்ளூர் நெடுஞ்சாலை தொழுவூர் சுடுகாடு வளைவில் வரும்போது எதிரே திருவள்ளூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த பால் வண்டி மோதி ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சதீஷ் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சதீஷ் மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சதீஷ் பலியானார். இதனால் செவ்வாப்பேட்டை போலீசார் ஐயப்பன், சதீஷ் ஆகிய இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளில் கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்