சென்னை,
திருவண்ணாமலை தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை எனக்கூறி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், கோவை தெற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.