திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 33 பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் இன்று பள்ளிக்கு வந்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக ஊழியர்கள் சமையலறையில் இருந்த சிலிண்டரை பற்ற வைத்துள்ளனர்.
அப்போது திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. சத்துணவு ஊழியர்கள் தீயணைப்பான் கருவியை கொண்டு தீயை அணைப்பதற்கு பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால் தீயணைப்பான் செயல்படாததால் தீயை அணைக்க முடியாமல் தவித்துள்ளனர்.
இதனிடையே பள்ளியில் இருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பள்ளிக்குச் சென்று, எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை ஈர கோணிப்பையை போட்டு மூடி அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.