சென்னை,
கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தப்பட்ட குரூப் -4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
தொடர் விசாரணையில், குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலமானது. டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர் ஜெயக்குமார் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். முறைகேடு புகார்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில், இனி வரும் காலங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், பல்வேறு சீர்திருத்தங்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
இதன்படி,
*குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் பொது அறிவு தாள் இரண்டாக நடத்தப்படும்.
* குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் முதல் நிலை, முதன்மை நிலை என இரு தேர்வுகளாக மாற்றம்.
*தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடக்கும். தேர்வர்கள் 9 மணிக்கே தேர்வறைக்கு வர வேண்டும்.
* கொள்குறிவகைத் தேர்வுகளில் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் பதிலளிக்க வேண்டும். விடை தெரியவில்லையெனில் கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும்.
* தேர்வர்களுடைய விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையொப்பத்திற்கு பதிலாக தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.
*தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்து வர தற்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்பட்டு அதி நவீன தொழில்நுட்ப ஜி.பி.எஸ் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நடவடிக்கை முழுவதும் நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்