சென்னை,
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.
அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.தற்போது வரை 21 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த நிலையில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று (12-ந் தேதி) நடைபெறுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவரை 91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 70.4 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மேலும், இதுவரை தமிழகத்தில் 1 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
இவர்களை இலக்கு வைத்து நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.