தமிழக செய்திகள்

இன்று 5-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

சென்னை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம்ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதல்-அமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா தனது 68 வயதில் உயிரிழந்தார். இன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளிட்ட பலர்கலந்துகொள்ள உள்ளனர்.