தமிழக செய்திகள்

டெட் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

விண்ணப்பத் திருத்தங்களை நாளை முதல் 13-ந் தேதி வரை திருத்திக் கொள்ளலாம்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2015 செப்டம்பர் 1-ந் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி செய்து வரும் ஆசிரியர்கள் இத்தேர்வினை கட்டாயம் எழுத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்ப பதிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணபித்து வருகின்றனர். விண்ணப்பிக்க கூடிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதனால் இதுவரையில் விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். டெட் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பத் திருத்தங்களை நாளை முதல் 13-ந் தேதி வரை திருத்திக் கொள்ளலாம்.