முதுமலை யானைகள் முகாம் 
தமிழக செய்திகள்

முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

யானைகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற முதுமலை யானைகள் முகாமில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப்பயணிகள் திரண்டனர்.

யானைகள் முகாம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உலக புகழ்பெற்ற முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியான தெப்பக்காட்டில் ஆசியாவின் பழமையான வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கமாகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்த நிலையில், வார விடுமுறை நாளான நேற்று காப்பகத்தில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

ஆற்றில் குளித்த யானைகள்

அங்கு நிலவிய இதமான தட்பவெப்ப நிலை மற்றும் சாரல் மழையை பயணிகள் வெகுவாக ரசித்தனர். முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் அங்குள்ள மாயாற்றில் குதூகலமாக குளிப்பாட்டப்பட்டன.யானைகள் ஆற்றில் தண்ணீரை உறிஞ்சி அடித்துக் கொண்டும், ஒன்றுக்கொன்று விளையாடி கொண்டும் செய்த நளினமான குறும்புகளை கண்டு பயணிகள் வியந்தனர்.

ஊட்டச்சத்து உணவுமுகாம்

யானைகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காகத் தனி சமையல் கூடத்தில் ராகி, கொள்ளு போன்ற தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு உருண்டைகள் தயார் செய்யப்பட்டன.அவற்றைப் பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் ஒவ்வொரு யானையின் பெயரைக் கூப்பிட்டு வழங்கினர். யானைகள் வரிசையாக நின்று கம்பீரமாக உணவு உட்கொள்ளும் இந்த கண்கொள்ளா காட்சியை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.