தமிழக செய்திகள்

கோடை வெயிலை சமாளிக்க அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பாபநாசம் சோதனைச் சாவடி பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெயிலை சமாளிக்க பொதுமக்கள் அருவிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று வார விடுமுறை என்பதால், அருவிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அருவிக்கு செல்லும் வழியில் சுமார் 1 கி.மீ. நீளத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாபநாசம் சோதனைச் சாவடி பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுலா பயணிகளின் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பிறகே அனுமதித்து வருகின்றனர்.

இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். 'குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

அருவிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், வரிசையில் காத்திருந்து அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்தனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனர்.