தமிழக செய்திகள்

உதயநிதி ஸ்டாலினை விசாரிக்கும் இடத்தை மாற்றிய காவல்துறை..என்ன காரணம்?

தஞ்சை தெற்கு காவல் நிலையத்தைச் சுற்றியும் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை

தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் தஞ்சைக்கு வருகை தந்துள்ளனர்.

தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது

காலை 11 மணியளவில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீசார், அங்கிருந்து தஞ்சாவூர் அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

மதிய உணவு சாப்பிட்ட உதயநிதி

2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனிலேயே பயணம் செய்து வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பிளாஸ்க்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன் தேனீர் வழங்கினர்.

போலீஸ் குவிப்பு

இந்தநிலையில், உதயநிதி விசாரணைக்காக தஞ்சை தெற்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி மீது தஞ்சை கிழக்கு சரக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

திமுகவினர் அதிகளவு கூடாத வண்ணம் தஞ்சை தெற்கில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியகோவில் மேம்பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சாலை இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தஞ்சை தெற்கு காவல் நிலைய பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

5 மாவட்ட எஸ்.பி.க்கள் வருகை

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்து வரப்பட இருக்கும் நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சை வருகை தந்துள்ளனர். தஞ்சை தெற்கு காவல் நிலையத்தைச் சுற்றியும் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

என்ன காரணம்

தஞ்சை கிழக்கு காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், உதயநிதி ஸ்டாலினை தஞ்சை மணிமண்டபம் உள்ள தெற்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.