அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை விருதுநகருக்கு 2 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தனியார் பஸ்கள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் நேரம் எடுப்பதில் பஸ் ஓட்டுநர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சணை ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 8.50 க்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து விருதுநகருக்கு கிளம்பிய தனியார் பஸ் மெதுவாக கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.
பின்னால் 8.52 மணிக்கு கிளம்பிய அரசு நகரப்பஸ் சிவன் கோயில் பஸ் நிறுத்தம் பகுதியில் முன்னாள் மெதுவாக சென்ற தனியார் பஸ்சை முந்த முயன்ற போது தனியார் பஸ் ஓட்டுநருக்கும் அரசு பஸ் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தனியார் பஸ் ஓட்டுனரும் அரசு பஸ் ஓட்டுனர் ராஜா என்பவரும் சாலையில் பஸ்சை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட போது தனியார் பஸ் ஓட்டுநர் அரசு பஸ் ஓட்டுனர் ராஜாவை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி அரசு பஸ் ஓட்டுனரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்தால் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் சமாதானத்தை ஏற்று அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை எடுத்துச் சென்றனர்.