தமிழக செய்திகள்

மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

அம்மா பாலத்தின் நுழைவுவாயில் பகுதியை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மதுரை,

மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து மாற்றம்

மதுரை கரிமேடு போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா பாலமானது மிகவும் குறுகியதாக இருப்பதால் இப்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பாலத்தின் இருபக்கங்களிலும் உள்ள நுழைவுவாயில் பகுதியை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைதுறையினர் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்வதற்காக இலகுவான போக்குவரத்தினை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆரப்பாளையம் ஜல்லிக்கட்டு ரவுண்டானாவில் இருந்து அம்மா பாலம், கே.வி.சாலை வழியாக தத்தனேரி ரோடு செல்லும்.

அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. வாகனங்கள் அனைத்தும் ஆரப்பாளையம் ரவுண்டானா, வைகை தென்கரை சாலை வழியாக குரு தியேட்டா சந்திப்பிற்கு சென்று திரும்பி காமராஜர் பாலம், பாத்திமா காலேஜ் ரவுண்டானா சென்று வலதுபுறம் திரும்பி கே.வி. சாலை மற்றும் தத்தனேரி சாலை வழியாக செல்ல வேண்டும்.

ஒரு வழிப்பாதை

கே.வி.சாலையில் இருந்து அம்மா பாலம் வழியாக ஆரப்பாளையம் ஜல்லிக்கட்டு ரவுண்டானாவிற்கு ஒரு வழிப்பாதையில் செல்ல இருசக்கர மற்றும் இலகுரக நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் கே.வி.சாலையிலிருந்து பாத்திமா கல்லூரி சந்திப்பிற்கு சென்று இடதுபுறம் திரும்பி குரு தியேட்டர் சந்திப்பிற்கு சென்று டி.டி. ரோடு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையம் செல்லலாம்.

மேலும், குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து இதர சாலைகளுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அருள்தாஸ்புரம் சந்திப்பிலிருந்து தத்தனேரி பாலம் வரை ஒருவழிப்பாதையாக தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த சந்திப்பிலிருந்து தத்தனேரி பாலத்திற்கு வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் செல்லாம். தத்தனேரி பாலத்திலிருந்து அருள்தாஸ்புரம் சந்திப்பிற்கு எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதி இல்லை.

முற்றிலும் தடை

இந்த வாகனங்கள் அனைத்தும் தத்தனேரி பாலத்தில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக அருள்தாஸ்புரம் சந்திப்பிற்கு சென்று இடதுபுறம் திரும்பி இ.எஸ்.ஐ. மருத்துவமனை சாலை வழியாக பாத்திமா கல்லூரி சந்திப்பு சென்று இதர சாலைகளுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலையிலிருந்து குரு தியேட்டர் சப்வே, வைகை தென்கரை சாலை, அம்மா பாலம், கே.வி. சாலை வழியாக தத்தனேரி ரோடு செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டுகிறது. இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றமானது இன்று முதல் சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.