தேனி,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெண் உயிரிழந்துள்ளார். அவரது கணவன் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (47 வயது). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (40 வயது). இவர்களுக்கு பால்பாண்டி (22 வயது) என்ற மகனும், யோகலட்சுமி (18 வயது) என்ற மகளும் உள்ளனர். பால்பாண்டி பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தேனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாண்டீஸ்வரன் வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பால்பாண்டிக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தெரிய வந்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்களை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது உறவினர்கள், பெண்ணின் சாவுக்கு பால்பாண்டிதான் காரணம் எனக்கூறி, கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பாண்டீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாண்டீஸ்வரன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள அரளி விதையை அரைத்து (விஷம்) குடித்தனர்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டீஸ்வரன் மற்றும் யோகலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.