தமிழக செய்திகள்

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது பரிதாபம்: தொண்டையில் எலும்பு சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு

வாய் பேச முடியாத ரோகித் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான்.

ஈரோடு ,

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அம்மன் கோவில் தலையநல்லூர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). அவருடைய மனைவி பரிமளா தேவி (34). இவர்களுக்கு ரோகித் (7), கைக்குழந்தை தர்ஷித் என்கிற 2 மகன்கள் உள்ளனர். இதில் வாய் பேச முடியாத ரோகித் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான். இந்த நிலையில் பரிமளா தேவி பிரியாணி சமைத்து, பாத்திரத்தில் வைத்துவிட்டு தர்ஷித்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது ரோகித் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரியாணியை சாப்பிட்டுள்ளான். இதில் எதிர்பாராதவிதமாக பிரியாணியில் இருந்த எலும்பு தொண்டைக்குள் சிக்கியது. இதனால் ரோகித்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

எலும்பு சிக்கி சாவு

இதை கவனித்த அவனது பாட்டி உடனே ரோகித்தின் தொண்டைக்குள் கையை விட்டு எலும்பை எடுத்துள்ளார். இதில் ரோகித் மயக்கம் அடைந்தான். இதைத்தொடர்ந்து அவனை சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ரோகித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.