தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களை திறம்பட நிர்வகிக்க தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி

இப்பயிற்சியின் போது, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) திறம்பட செயல்படுத்துவது குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

சென்னை,

மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்).செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று நடைபெற்றது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி

மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான (Shelter for Urban Homeless) நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedures – SOP) குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று (06.08.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் இயக்குநர்கள், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் , கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டு அலுவலர்கள், தங்குமிட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தங்குமிட மேலாண்மையுடன் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.

தரமான சேவை

இப்பயிற்சியின் போது, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) திறம்பட செயல்படுத்துவது குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக பயனாளிகள் சேர்க்கை மற்றும் மறுவாழ்வு, தங்குமிட மேலாண்மை, பதிவேடுகள் பராமரித்தல், சுகாதாரம் மற்றும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், குறைதீர் அமைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நகர்ப்புற ஆதரவற்றோருக்கு கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தங்குமிடங்களின் செயல்பாட்டில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டு, அனைத்து பங்குதாரர்களிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இப்பயிற்சியானது, பெருநகர சென்னை மாநகராட்சி, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, நகர்ப்புற ஆதரவற்றோருக்கு பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் கண்ணியமான தங்குமிட வசதிகளை உறுதி செய்வதற்கும், தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.