சென்னை,
போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 8-வது நாளை எட்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று காலையில் சுமார் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படாததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை நேரத்தில் ஸ்டிரைக் நடப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஸ் ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளை உடனே இயக்க வேண்டும். வழக்குகளை பிறகு விரிவாக விசாரித்துக் கொள்ளலாம். எனவே இன்றிரவு முதலே பேருந்துகளை இயக்குங்கள்என்று அறிவுறுத்தினார்கள்.
பொதுமக்கள் நலன் கருதி ஐகோர்ட்டு தெரிவித்த யோசனையை ஏற்க போக்குவரத்து கழக நிர்வாகிகள் தயங்கினார்கள். இதையடுத்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, பொங்கல் பண்டிகைக்காக 17-ந்தேதி வரை பேருந்துகளை இயக்குவது பற்றி மனசாட்சியுடன் நல்ல முடிவு எடுங்கள் என்றனர். அதோடு வியாழக்கிழமை (இன்று) இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
அதன் பிறகு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூடடமைப்பினர் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அவர்கள், பேருந்து வேலைநிறுத்தத்தை கைவிட 3 நிபந்தனைகள் விதித்தனர்.
1. அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்றுக் கொள்கிறோம். இதுபற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு உறுதி அளிக்க வேண்டும்.
2. 2.44 மடங்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் கோர்ட்டு நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார்.
3. எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு சரியான உறுதி மொழியை தர வேண்டும். இவ்வாறு 3 நிபந்தனைகள் வெளியிடப்பட்டன.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் இந்த நிபந்தனைகளை அரசு ஏற்கவில்லை. 2.44 மடங்கு ஊதிய ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையே சமரசம் ஏற்படுவதில் இழுபறி ஏற்பட்டது. இன்று காலையும் இந்த இழுபறி நீடித்தது.
அப்போது தொழிற்சங்கங்கள் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 காரணி ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வதாகவும், 2.57 காரணி ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை வாபஸ் பெறவேண்டும். போராட்ட காலத்தில் வேலைக்கு வரவில்லை என்று சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்று கூறியிருந்தனர்.
இந்த கோரிக்கையை அட்வகேட் ஜெனரல் ஏற்க மறுத்தார். போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளை கைவிட்டால், போராட்ட காலத்தில் பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கும், இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். எனவே இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது. அதேநேரம், ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு மத்தியஸ்தரை நியமிப்பது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்துள்ளனர். அப்போது அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரலுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் இன்று மதியம் வரை பஸ் ஸ்டிரைக் நீடித்தது. வேலை நிறுத்தம் விலக்கப்படுமா? என்பது பற்றி இன்று பிற்பகலில் தெரியும். 2.15 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் விசாரிக்க தொடங்கியதும் தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்த நடுவர் நியமிப்பது தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு கேட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு பிற்பகல் 2.45 மணிக்கு ஒத்திவைக்கப்படது.
இந்த நிலையில் நீதிபதி தலைமையில் சமரச ஏற்பாடுக்கு தயார் என்று தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு புதிய நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.ஐ.டி.யூ. தலைவர் சவுந்தரராஜன் இன்று பகல் 11.30 மணிக்கு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு நிர்வாகத்தை பொறுத்தவரையில் நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும். எங்களுக்கு என்ன உத்தரவு தரவேண்டும் என்ற மெமோவை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சமர்ப்பித்து இருக்கிறோம். அந்த மெமோவில் 2.44 என்று இப்போது அரசு சொல்லியிருக்கிற தொகையை அரசு இடைக்கால ஏற்பாடாக நாங்கள் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். அந்த ஒப்பந்த அடிப்படையில் அல்ல.
எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கிற 0.13 பெருக்கு காரணி என்கிற வித்தியாசம் ஒரு தனி நடுவர் தீர்ப்புக்கு விடப்பட வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அந்த தீர்வராக இருக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் அந்த நடுவர் தீர்வு மன்றத்தில் விசாரித்து தீர்வு காணப்பட வேண்டும். 3 மாதத்திற்குள் அந்த நடுவர் மன்றம் தனது முடிவை தெரிவிக்க வேண்டும்.
எங்களுடைய வேலை நிறுத்த காலத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஏனென்றால் சட்டவிரோத ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள வேலை நிறுத்தம் இது. வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்டவைகளை வைத்து நீதிமன்றத்தில் நாங்கள் சமர்ப்பித்து இருக்கிறோம்.
நீதிமன்றத்தில் இதைவிட தொழிற்சங்கங்கள் பொறுப்பாகவும் ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உகந்த வகையிலும் ஒரு தீர்வை சொல்ல முடியாது. நீதிமன்றம் நீங்கள் கட்டாய நடுவர் தீர்வுக்கு ஒத்துக் கொள்கிறீர்களா? என்று அட்வகேட் ஜெனரலை கேட்டார்கள். அட்வகேட் ஜெனரல் இது சம்பந்தமாக அரசாங்கத்திடம் ஆலோசனை பெற்று 2.15 மணிக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு போயிருக்கிறார்.
அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும். நீதிமன்றத்தின் இறுதியான உத்தரவோ தீர்வோ வருவதை பொறுத்து எங்களுடைய அனைத்து சங்கங்கள் கூடி அடுத்த நடவடிக்கை குறித்து தீர்மானிப்போம். இதுவும் மக்களுக்காகத்தான். இதைவிட இறங்கி வர முடியாது. இதையும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எங்கள் போராட்டம் நிச்சயமாக தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.