பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் மலைக் கோவில் செல்ல பிரதான சாலையாக படிப்பாதை உள்ளது. அதேபோல் விரைவாக மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரை பயன்படுத்துகின்றனர்.
இந்த ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று மாதாந்திர பராமரிப்பு பணி தொடங்கியது. இதையொட்டி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.
பராமரிப்பு பணியின்போது கரூரிலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய ரோப் கார் ஒரு பெட்டி மட்டும் பொருத்தப்பட்டது. அதன்பின்னர் ஏற்கனவே இருந்த பெட்டிகளுடன், புதிய பெட்டி பொருத்தப்பட்ட ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, புதிய பெட்டியில் வேறு ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமா? என வல்லுனர்கள் சோதனை நடத்தப்படும். அதன்பின்னர் புதிதாக அனைத்து பெட்டிகளும் வரவழைக்கப்பட்டு பொருத்தப்படும் என்றனர்.