சென்னை,
கொடைச்சிறப்பும் வீரமும் ஒருங்கே திகழ்ந்த மாமன்னர் வல்வில் ஓரிக்கு வீரவணக்கம், மாமன்னரின் விழாவை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
கடையெழு வள்ளல்களில் ஒருவரும், கொடைச் சிறப்பும், வீரமும் ஒருங்கே திகழ்ந்த "மாமன்னர் வல்வில் ஓரி" வீரவணக்கம்!
மாமன்னர் வல்வில் ஓரி அவர்களின் நினைவு விழாவை முன்னிட்டு, இன்று ஈரோடு மாவட்டம், கொட்டாரத்தோட்டம், அறச்சலூரில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கலந்து கொண்டு மாமன்னர் வல்வில் ஓரி திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.
அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விடியல் சேகர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகியான திலகபாமா அன்புடன் வரவேற்று நிகழ்வில் இணைந்தனர்.
மேலும், இந்நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், காரியகர்த்தாக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, மாமன்னர் வல்வில் ஓரி புகழையும் வீர வரலாற்றையும் போற்றும் வகையில் தங்களது மரியாதையை செலுத்தினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.