திருச்சி,
திருச்சியில் பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக் (வயது 32). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்குமுன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், புதுமாப்பிள்ளை கார்த்திக் இன்று திருச்சி மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். புறவழிச்சாலையில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது, பைக்கில் சென்ற கார்த்திக்கை மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் முடிந்த 7 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை கார்த்திக் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அய்யம்பாளையம் கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.