தமிழக செய்திகள்

திருச்சி: ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

திருச்சியைச் சேர்ந்த ஒருவர் தனது விவசாய நிலத்திற்கு வண்டல் மண் அள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி கோரியிருந்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் விவசாய நிலத்துக்கு வண்டல் மண் அள்ள அனுமதி வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை பணி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

வண்டல் மண் அள்ள அனுமதி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்தவர் செல்லையா மகன் எட்வர்ட் (வயது 49). இவர் தனது விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் உள்ள மாங்குளத்தில் இருந்து வண்டல் மண் அள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி கோரியிருந்தார்.

ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட நீர்வளத்துறை ஆய்வாளர்

இதுதொடர்பாக புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளரான லோகநாதன்(41) என்பவரை அணுகிய போது, அவர் அனுமதி வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தனர்.

கைது

அதன்படி, திருச்சி மாவட்ட நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் வைத்து எட்வர்டிடம் இருந்து ரூ.4 ஆயிரத்தை லஞ்சம் வாங்கிய லோகநாதனை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.