தமிழக செய்திகள்

கோவில் திருவிழா பேனரில் அம்மன் வேடத்தில் திரிஷா: 2 பேர் மீது வழக்குப்பதிவு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர்.

சேலம்,

அம்மன் வேடத்தில் திரிஷா

சேலம் மாவட்டம், ஆத்துார் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஆத்துார் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனரில் தமிழகம் முதல்-அமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்கு பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும். அதற்கு கீழே நடிகை திரிஷா அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கு சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று விவாதத்திற்குள்ளானது.

2 பேர் மீது வழக்குப்பதிவு

மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இரவோடு இரவாக பேனரில் இருந்து நடிகை திரிஷா புகைப்படம் மாற்றப்பட்டது. திரிஷா படம் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை ஒட்டி வைத்தனர்.

இந்த நிலையில், ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் கடைவீதியை சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.