சென்னை,
அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த வியாழக் கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், சுயேச்சையாக டி.டி.வி.தினகரன், பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும் மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட அவர் 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். 48 ஆயிரத்து 306 ஓட்டுகள் பெற்ற மதுசூதனனுக்கு 2-வது இடம் கிடைத்தது. டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட்டவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மருது கணேஷ் (தி.மு.க.), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்), கரு.நாகராஜன் (பாரதீய ஜனதா) உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வாக 29ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவி ஏற்கிறார்.
வருகிற 29ந்தேதி வைகுண்ட ஏகாதசி வருகிறது. அன்று நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் டி.டி.வி.தினகரன் பதவி ஏற்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.