தமிழக செய்திகள்

த.வெ.க., பெண்கள் குறித்து விமர்சனம்: பொன்ராஜ் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு

முன் ஜாமீன் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், த.வெ.க., தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு கோர்ட்டில் விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து செய்தி வெளியானதும், விஜய்க்கு ஆதரவாக அவரது கட்சி பெண் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர்.

இதை, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து, தன் கட்சி பெண்களை இழிவாக விமர்சனம் செய்த பொன்ராஜ்க்கு எதிராக டி.ஜி.பி.யிடம் விஜய் புகார் செய்தார். இதேபோல, கடலூர் புதுநகர் போலீசில், அந்த மாவட்ட த.வெ.க., செயலாளரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ராஜ்குமாரும் புகார் செய்தார். தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொன்ராஜ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசாரும், கடலூர் புதுநகர் போலீசாரும் தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பொன்ராஜ் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘‘புகார்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் திரிக்கப்பட்டவை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அதிகாரதத்தை துஷ்பிரயோகம் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் விமர்சனம் மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றை முடக்கும் நோக்கத்தில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே முன்ஜாமீன் வழங்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார். இந்த மனு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.