ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டியதுடன், அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக த.வெ.க. நிர்வாகி மற்றும் அவரது அண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய த.வெ.க. செயலாளர் பாலமுருகன் (33) மற்றும் அவரது அண்ணன் முண்டன் என்ற முண்டசாமி (36) ஆகியோர் கல்குவாரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும், அங்கிருந்த கம்ப்யூட்டர், டி.வி., மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கல்குவாரி மேலாளர் பூலையா, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.