தமிழக செய்திகள்

'நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, ஆனால்...' - பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு

நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல என்று தவெக தலைவர் கூறினார்

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும், போராட்டக்குழுவினரையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திப்பார் என அக்கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் தற்போது பரந்தூர் சென்றடைந்தார். அவரை போராட்டக்குழுவினர் வரவேற்றனர்.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பிரசார வாகனத்தில் நின்றவாறு விஜய் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது,

எனது கள அரசியல் பயணம் பரந்தூரில் இருந்து தொடங்குகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டையும் ஆளும் அரசு எடுக்கிறது. உங்கள் நாடகத்தை பார்த்துக்கொண்டு பொதுமக்கள் இனியும் அமைதியாக இருக்கமாட்டார்கள்.

நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல... விமான நிலையம் வரக்கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால், இந்த இடத்தில் வரக்கூடாதுஎன கூறுகிறேன்

விமான நிலைய திட்டத்தை நான் எதிர்க்கவில்லை. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.

வளர்ச்சி முக்கியம்தான், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீர்கள். விமான நிலைய திட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் இந்த திட்டத்தை அமல்படுத்துங்கள்' என்றார்

SCROLL FOR NEXT