சென்னை,
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டி இருப்பதால் த.வெ.க.வின் பலம் 107 ஆக இருக்கிறது.
ஆனால் ஆட்சி அமைப் பதற்கு 118 இடங்கள் தேவை. எனவே த.வெ.க., தி.மு.க. கூட்டணிகட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டது. இதில் காங்கிரஸ் முதல் கட்சியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததுடன், அமைச்சரவையிலும் இடம்பெறுவோம் என்று தெரிவித்தது. அந்த கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்த ஆதரவு கடிதத்துடன் கவர்னர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க 2 முறை உரிமை கோரினார். ஆனால் போதிய பெரும்பான்மை இல்லை என்று கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விஜய் பதவி ஏற்பதில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தது.
இந்த ஆதரவின் மூலம் த.வெ.க.வின் பலம் 120 ஆக உயர்ந்தது. இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டிய எண்ணிக்கையாகும். இதனைதொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில், த.வெ.க. தலைவர் விஜய் “ஜோசப் விஜய் எனும் நான்” என கூறி தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் தமிழ்நாட்டின் 13-வது முதல்-அமைச்சர் தவெக தலைவர் விஜய் ஆவர். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
விஜய் பதவியேற்பு விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.