தமிழக செய்திகள்

பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்கி வருகின்றனர் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பெண்ணுக்கு தவெக செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கணவனை இழந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு

ஒருபுறம் ஆளுங்கட்சி திமிரில், பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்கி வருகின்றனர். மறுபுறம், அதிகார மமதையில், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணன் போன்றோர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேரம் பேசுகின்றனர். இப்படி ஒட்டுமொத்தமாக பெண்கள் பாதுகாப்பை சீரழிக்கும் கும்பலை கைகுள்ளேயே வைத்துக்கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்பொழுதும் "zero tolerance"-ஐ உறுதி செய்வோம் என்று கூற தங்களுக்கு வாய்கூசவில்லையா?

உறுதி செய்யுங்கள்

முதலில் தங்கள் கட்சிக்குள் இருக்கும் காமக்கொடூரர்களை கட்டுக்குள் கொண்டுவந்து மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! அதற்குப் பின்பு "தூய சக்தி" என்று மார் தட்டுங்கள் முதல்-அமைச்சரே!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.