தமிழக செய்திகள்

விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரி தவெகவினர் கோஷம் - கவர்னர் மாளிகை முன்பு பரபரப்பு

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து தவெக நிர்வாகிகளை அப்புறப்படுத்தினர்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் நேற்று காலை கவர்னரை சந்திக்க 2-வது முறையாக வந்தார். கவர்னரை விஜய் சந்தித்து கொண்டிருந்த நேரத்தில் தவெக நிர்வாகிகள் சிலர் கவர்னர் மாளிகை அருகே வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூரைச் சேர்ந்த நிர்வாகிகள் 2 பேர், விஜய்க்கு முதல்-அமைச்சராக கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரி கையில் பதாகையை ஏந்தி நின்றனர். மேலும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரி கவர்னரை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, அவர்கள் கையில் இருந்த பதாகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அந்த பதாகையில் "கவர்னரே... செய்து வை... செய்து வை...விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வை... அரசியல் விளையாட்டு விளையாடாதே" என எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் கவர்னர் மாளிகை முன்பு சிறிது நேரம் பரபரப்பானது.