சென்னை,
கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ வி.எஸ். பாபு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வி.எஸ். பாபுக்கு இன்று அதிகாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுதிணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ். பாபு உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் வி.எஸ்.பாபு, மூச்சுத் திணரல் காரணமாக செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (Critical Care Unit), பல்வேறு மருத்துவத்துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
மருத்துவத் தேவைக்கேற்ப அவருக்கு உரிய சிகிச்சைகளும் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. வேட்பாளராக போட்டியிட்ட வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அண்மையில் முடிந்த தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் வி.எஸ்.பாபு பங்கேற்றிருந்தார்.