தமிழக செய்திகள்

திமுகவின் நியூ வெர்ஷனான தவெக! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

செங்கல், ஜல்லியை இலவசமாகத் தர மறுத்தவர் மீது தவெக நிர்வாகி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

வேலூரில் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் தவெக நிர்வாகி ஒருவர் மாமூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது ஆளுங்கட்சியினரின் அராஜகப் போக்கை வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கொலைவெறித் தாக்குதல்

செங்கல் மற்றும் ஜல்லியை இலவசமாகத் தர மறுத்த கிரேன் ஓட்டுநர் மீது தவெக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மாமூல் வேட்டை

வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் தவெக நிர்வாகி ஒருவர் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய ஐந்து நாட்களுக்குள்ளாகவே, மீண்டும் ஒரு தவெக நிர்வாகி மாமூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது ஆளும் கட்சியினரின் அராஜகப் போக்கைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

முதல்-அமைச்சர் கண்டிக்க வேண்டும்

திமுக தீய சக்தி, தான் தூய சக்தி எனத் தம்பட்டம் அடித்துவிட்டு, தீய சக்தி திமுகவின் நியூ வெர்ஷனாக தவெக உருமாறி வரும் வேளையில், முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு, தனது கட்சியினரின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்க வேண்டும்! அதுதான் தமிழக மக்களுக்கும் தவெகவுக்கும் நன்மையைப் பயக்கும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.