தமிழக செய்திகள்

விருப்ப மனுவில் இடம் பெற்ற கேள்வியால் அதிர்ச்சி அடைந்த தவெக தொண்டர்கள்

சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று (பிப். 6) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை பிப்.14 ஆம் தேதி வரை தவெக தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. நாளை முதல் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் விருப்ப மனுவை அந்தக் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ. 100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் விருப்ப மனு பெற குவிந்துள்ளனர்.

இந்தநிலையில், விருப்பமனு படிவத்தில் கட்சி சார்பாக போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளீர்களா? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. இது தவெக தொண்டர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே எங்கள் தெருக்களில் இயல்பாக இருக்க முடியவில்லை. வாகனங்களை வீட்டின் முன்பு நிறுத்துகிறார்கள். தடுப்புகள் அமைக்கின்றனர். ரொம்பவே சிரமமாக இருக்கிறது என தவெக அலுவலகம் அருகே வசிக்கும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.