தமிழக செய்திகள்

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும்: தோழமை கட்சிகள் கூட்டத்தில் விஜய் பேச்சு

எத்தகைய சாவல்களையும் எதிர்க்கொள்ள தயார். தவெக தற்போது வலிமையான கட்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடந்து வருகிறது. த.வெ.க.வுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தநிலையில், ஆட்சி அமைக்க த.வெ.க. புது வியூகம் அமைத்தது. அதாவது, எதிர் அணியான தி.மு.க. கூட்டணி கட்சிகளே தங்களை ஆதரிக்கும் வகையில் நுணுக்கமான அரசியலை கையில் எடுத்தது. அதற்கு வெற்றியும் கிடைத்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளித்தது. கம்யூனிஸ்டுகள் அக்கட்சியின் விதிகளின்படி வெளியில் இருந்து ஆதரவை அளித்தது. முதல்-அமைச்சர் விஜய் தனக்கும், தனது அரசுக்கும் ஆதரவு அளித்த தலைவர்களை வீடு தேடி சென்று சந்தித்து, உரையாடினார்.

அவரின் இந்த அணுகுமுறையால், ஏன் தொடர்ந்து த.வெ.க. அணியில் இணைந்து பணியாற்ற கூடாது என்ற சிந்தனையை அக்கட்சிகளுக்கு ஏற்படுத்தியது. இதற்கிடையே, ம.தி.மு.க.வும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது.

விஜய் தீவிரம்

ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து இருக்கும் கட்சிகளை கூட்டணி கட்சிகளாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் முதல்-அமைச்சர் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார். விரைவில் நடக்க இருக்கும் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிகளுடன் இணைந்து சந்திக்க அவர் முடிவு செய்துள்ளார்.இதற்காக முதல் கட்டமாக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்தார். அதன்படி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு கடிதம் எழுனார். இந்த கடிதத்தை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் அந்தந்த தலைவர்களை சந்தித்து வழங்கினர். கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுக்கும் இந்த கடிதத்தை அவர்கள் வழங்கினர். ஆனால் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அவர்கள் தெரிவித்து விட்டனர்.

விஜய்க்கு உற்சாக வரவேற்பு

கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பங்கேற்றனர்.அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, வன்னியரசு, விஸ்வநாதன், துரை வைகோ எம்பி, முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் உள்ளிட்டரும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டணி கட்சி

மாலை 4 .15 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.15 மணி வரை நீடித்தது. கூட்டத்தில், த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுவது, உள்ளாட்சி தேர்தலை கூட்டணியுடன் சந்திப்பது, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலசி ஆராயப்பட்டது.கூட்டத்தில் பேசிய விஜய், 'தக்க நேரத்தில் கைகொடுத்த உங்களுக்கு நன்றி. தொடர்ந்து உங்களுடன் பணியாற்றவே விரும்புகிறேன். பல களம் நமக்காக காத்திருக்கிறது' என்று தெரிவித்தார்.தொடர்ந்து இதுபோன்று கூட்டங்கள் மூலம் சந்திப்பை நடத்த விஜய்யிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

தோழமை கட்சிகள்

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் விஜய், எத்தகைய சாவல்களையும் எதிர்க்கொள்ள தயார். தவெக தற்போது வலிமையான கட்சியாக உள்ளது. மேலும் சில கட்சிகள் நம்முடன் கூட்டணிக்கு வர உள்ளனர். பல ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி நிலைத்து நிற்கும். தவெக ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கும். தவெக தலைமையில் அமைய உள்ள கூட்டணியின் பெயரை அடுத்த கூட்டத்தில் அறிவிப்பேன். தோழமை கட்சிகளை ஒருங்கிணைக்க குழுவை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.