தமிழக செய்திகள்

கோவை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது!

பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை,

கோவை அடுத்த கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பேர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வடுகபாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் செங்காளியப்பன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் கேன்களில் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.